புதுடில்லி:
புதுடில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் பிப்,08ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை பிப்.11ம் தேதியும் நடக்கிறது.
இதற்காக ஆளும்கட்சியான ஆம்ஆத்மி, பாஜக, காங், உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து ஏராளமான மக்கள், ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு அம்மாநில ஆளும்கட்சியான ஆம்ஆத்மி ஆதரவளிப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டக்காரர்களை தூண்டிவிடுவதாகவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இது குறித்து பாஜக எம்பி பர்வேஷ் சர்மா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிப்.,11ல் புதுடில்லியில் நடக்க இருப்பது சிறிய தேர்தல் அல்ல; நாட்டின் நிலையான மற்றும் ஒற்றுமைக்கான தேர்தல். பாஜக ஆட்சி அமைந்தால், சிஏஏ க்கு எதிராக ஷாஹீன் பாக்கில் கூடியுள்ள மக்கள் ஒரு மணிநேரத்தில் அகற்றப்படுவார்கள். டில்லி மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகள் மற்றும் குழந்தைகளை கற்பழித்து கொன்றுவிடுவார்கள். அப்போது உங்களை காப்பாற்ற பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வரமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.