சென்னை,
வங்கி ஊழியர்கள் கடந்த 8ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கிகளை தனியார்மயம் ஆக்க கூடாது. இணைக்க கூடாது. வைப்புத் தொகைக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்.
வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்தது. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி கூட்டமைப்பு உள்பட 5 சங்கங்கள் பங்கேற்றன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக 21 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான காசோலை பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், வங்கி ஊழியர்கள் மீண்டும் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது, ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாள் வேலை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் மேம்பாடு, வங்கி அதிகாரிகளுக்கான வேலை நேரத்தை வரையறுத்தல் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்.
வருகிற 31ந்தேதி, பிப்ரவரி 1ந்தேதி ஆகிய தேதிகளிலும் நாடு தழுவிய அளவில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று கூறினார்கள்.