துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”முரசொலியைக் கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க-காரர்; துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி. என்று கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தினை எதிர்த்து நெட்டிசன்கள் சமுக வலைதலங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் வட்டாரத்தில் ரஜினி கூறியக் கருத்து பேச்சுப்பொருளானது. முரசொலிப்பற்றி தவறான கருத்தை வைத்தால் திமுகாவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று முரசொலி நாளிதழில் ரஜினிக்கு பதிலடி தரும் வகையில் 'முரசொலி' வைத்திருந்தால்...? என்று தலையங்கம் இடம் பெற்றுள்ளது.
முரசொலி' வைத்திருந்தால், 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பவன் என்று பொருள்.
‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன்' என்று பொருள். எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்பவன் என்று பொருள்.
தமிழை, அமிழ்தெனக் கருதுபவன் என்று பொருள். தமிழ்ப் பகைவரை இனம் கண்டவன் என்று பொருள்!
‘முரசொலி' வைத்திருந்தால், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்பவன் என்று பொருள். சமஸ்கிருத மயமாக்கலை எப்போதும் எதிர்ப்பவன் என்று பொருள்.
தமிழ் காக்கும் போராட்டத்துக்கு நடராசனையும், தாளமுத்துவையும் சிறைக்குத் தந்தவன் என்று பொருள்.
‘மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகமும் முகவரியும்' என்று உணர்ந்தவன் என்று பொருள்.
மொழியாதிக்கம் மட்டுமல்ல; எந்த ஆதிக்கத்தையும் ஏற்காதவன் என்று பொருள்!
'முரசொலி' வைத்திருந்தால், ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட ‘உடன்பிறப்பு' என்று பொருள்.
பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் புதிய தமிழகம் படைக்கப் புறப்பட்ட ‘தளபதி' என்று பொருள்!
‘முரசொலி'யை நீங்கள் வைத்திருந்தால் ‘மனிதன்' என்று பொருள்! என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.