சென்னை,
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுப்பதற்கு தமிழகத்தில் உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஊழியர்கள் 10 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
இந்த 4 மாவட்டங்களிலும் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவமுத்து என்பவர் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுப்பதற்கு பொதுநல வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
எனவே, நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிவகைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீதிமன்ற உத்தரவால் தமிழகம் முழுவதும் 1300 குடிநீர் ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
இதனால் கேன் குடிநீர் உற்பத்தியை நம்பி பயன்பெறும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்கக்கோரி வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்.