சோமாலியாவில் அல் ஷபாப் அமைப்பின் முக்கிய தீவிரவாதி பலி- அமெரிக்கா சாதனை
சோமாலியா, 

      ஆப்பிரிக்க மாகாணத்தில் உள்ள சோமாலியாவைத் தளமாகக் கொண்டு அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது.

 


 

இந்த அமைப்பு மிக கொடூரத் தாக்குதலுக்கும்,  கொலைகளுக்கும் பெயர்போனது மேலும் இது அல் கொய்தா அமைப்பின் கிளை அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

 



அல் ஷபாப் அமைப்பின் தீவிரவாதிகளை அழிக்க சோமாலிய ராணுவம் நெடு நாளாய் முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் சோமாலிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்காவும் அல் ஷபாப் அமைப்பின் தீவிரவாதிகளை பிடிக்க தீவிரித்தது. 

 


இந்நிலையில் கென்ய எல்லைப்பகுதியில் உள்ள சாகோவ் என்ற இடத்தில் அல் ஷபாப் இயக்கத்தின் முக்கியத் தலைவன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து நேற்று அமெரிக்க விமானங்கள் சென்று கென்ய எல்லைப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

 

இதில்  அல் ஷபாப் அமைப்பின் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டான் என்று அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டது. ஆனால் கொல்லப்பட்ட தீவிரவாதியின் தகவலை பற்றி அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.  

 

மேலும், இத்தாக்குதலை பற்றி சோமாலியா ராணுவம் வெளியிட்ட தகவலின்படி அமெரிக்க  ஏவுகணைகள் தாக்குதலில் சோமாலியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹார்முட்டின் உள்ளூர் மேலாளரான மொஹமத்  ஹாஜி சிராத்(55) இறந்துள்ளார்.